உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே குளத்தில் வியாபாரி பிணமாக மிதந்தது எப்படி? - போலீசார் விசாரணை

Published On 2023-04-24 06:25 GMT   |   Update On 2023-04-24 06:25 GMT
  • ஜெகநாதன் உடல் மிதப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
  • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி :

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட முழங்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 88).

இவர் சாமியார்மடம் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று காலை ஜெகநாதன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை தேட தொடங்கினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஜெகநாதன் உடல் மிதப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்தனர்.

இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஜெகநாதன் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் ஜெகநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கால் தவறி குளத்தில் விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News