குளச்சலில் கடலில் குதித்து பெண் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என போலீசார் விசாரணை
- அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
கன்னியாகுமரி:
குளச்சல் மரைன் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ்குமார், முதல் நிலை காவலர் சிவகுமார் ஆகியோர் நேற்று பகல் குளச்சல் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து சென்றனர்.
குளச்சல் துறைமுக பழைய பாலம் அருகே செல்லும்போது பாலத்தின் மீது நடந்து சென்ற 52 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென கடலில் குதித்தார்.இதனை கவனித்த சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் உடனே கடலில் குதித்து அந்த பெண் குதித்த இடத்திற்கு நீந்தி சென்றார்.மணற்பரப்பிலிருந்து இதை பார்த்த மரமடியை சேர்ந்த மீனவர்கள் ராஜ், எப்ரேன் ஆகியோரும் கடலில் குதித்து நீந்தி சென்றனர்.சிறிது நேரத்திற்கு பின்பு தத்தளித்துக்கொண்டிருந்த அந்த பெண்ணை மீட்டு கடலில் மூழ்காமல் பார்த்துக்கொண்டனர்.
இதற்கிடையே அந்த பெண் மயக்கமானார்.உடனே சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார் மற்றும் மீனவர்கள் அந்த பெண்ணை தாங்கிக்கொண்டு நீந்தினர்.பின்னர் அந்த வழியாக பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க சென்ற குறும்பனை கிறிஸ்து ஜெயந்தன் என்பவரை உதவிக்கு அழைத்தனர்.உடனே கிறிஸ்து ஜெயந்தன் வள்ளத்தை வேகமாக அவர்கள் பக்கத்தில் திருப்பி 4 பேரையும் வள்ளத்தில் மீட்டு மீன் துறைமுகத்தில் கரை சேர்த்தார்.
பின்னர் த.மு.மு.க. ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார்.அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நாகர்கோவிலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தக்க நேரத்தில் கடலில் குதித்து பெண்ணின் உயிரை காப்பாற்றிய மரைன் போலீஸ் மற்றும் மீனவர்களை பொதுமக்கள் பாராட்டினர். விசாரணையில் அந்த பெண் சாஸ்தான்கரை பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.