கார் மீது லாரி மோதியதில் 5 பேர் படுகாயம்
- கார் மீது லாரி மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்,
காரைக்கால் மேலஓடுகரை அடுத்த அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது44). இவர் கோடை விடுமுறையையொட்டி குடும்பத்துடன் காரில் மேட்டுப்பாளையத்துக்கு சுற்றுலா சென்றனர். உடன் நண்பர் சுந்தர் என்பவரும் சென்றார். அங்கு சுற்றிப்பார்த்து விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். வரும் போது சுந்தர் காரை ஓட்டி வந்தார். கரூர்-திருச்சி நெடுஞ்சாலை கீழவதியம் அருகே வந்துகொண்டிருந்தபோது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் பயணம் செய்த ராஜா (44), இவரது மனைவி வேணி (27), உறவினர் சந்தியா (23), சுந்தர் (43), நித்யா ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்ட 5 பேரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து ராஜா கொடுத்த புகார்படி தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் இளையராஜா (44) என்பவர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.