உள்ளூர் செய்திகள் (District)

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

Published On 2023-03-25 08:34 GMT   |   Update On 2023-03-25 08:34 GMT
  • புதுப்பாளையத்தில் வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி
  • இடிபாடுகளை அகற்றி உடல் மீட்கப்பட்டது

கரூர்,வீடு இடிந்து விழுந்து மூதாட்டி பலி

கரூர் அருகே உள்ள நெரூர் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 75) இவருடைய மனைவி லட்சுமி( 70 )விவசாய தொழிலாளர்கள். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான வீடு ஒன்று கரூர் மாவட்டம், நெரூரை அடுத்த புதுப்பாளையத்தில் உள்ளது. பழமையான இந்த வீட்டில் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி உள்ளனர். இந்நிலையில் இன்று காலை ஆறு மணி அளவில் வீட்டிற்குள் கட்டிலில் படுத்திருந்த போது திடீரென வீட்டின் மேல் பகுதி கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த பொழுது இடிபாடுகளில் சிக்கி லட்சுமி இறந்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள பொதுமக்கள் இடுப்பாடுகளை அகற்றி மூதாட்டியை மீட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வாங்கல் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்திகிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வீடு இடிந்து விழுந்து தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News