உள்ளூர் செய்திகள்

குளித்தலை அருகே பாம்பு கடித்து தொழிலாளி சாவு

Published On 2023-05-27 06:41 GMT   |   Update On 2023-05-27 06:41 GMT
  • குளித்தலை அருகே பாம்பு கடித்து தொழிலாளி உயிரிழந்தார்
  • தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்,

குளித்தலை அடுத்த பொருந்தலுார் பஞ்., கண்ணல்வடநாயக்கனுாரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). இவர் கடந்த 3 ஆண்டுகளாக தெலுங்கப்பட்டியில் உள்ள நாராயணன் என்பவரின் தோட்டத்தில் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தின் காய்ந்த மட்டைகளை அப்பறப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அப்போது தென்னை மட்டையில் மறைந்திருந்த பாம்பு ஒன்று பழனிசாமியை கடித்தது. இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பழனிசாமியை பரிசோதனை செய்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் இவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுகுறித்து பழனிசாமியின் மகன் ராமசாமி கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து பழனிசாமியின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News