உள்ளூர் செய்திகள் (District)

மரங்கள் வெட்டி கடத்தல்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2023-04-07 08:15 GMT   |   Update On 2023-04-07 08:15 GMT
  • மரங்கள் வெட்டி கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • இதுபற்றி மேலவளவு போலீசில் புகார் செய்யப்பட்டது.

மதுரை

மதுரை மூன்றுமாவடி சம்பக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தேடிவந்த செல்வம்(வயது62), விவசாயியான இவருக்கு உப்போடைப்பட்டியில் மாந்தோப்பு உள்ளது. இவர் அங்கு விலை உயர்ந்த மரம், செடி, கொடிகளை வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் தேடிவந்த செல்வம் சம்பவத்தன்று மதியம் மகன் விவேக்குடன் உப்போடைப்பட்டி மாந்தோப்புக்கு சென்றார். அப்போது அங்கு 5பேர் கும்பல், அவரது தோப்பில் உள்ள மரங்களை வெட்டி லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தது. அதனை விவேக் தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் சரமாரியாக அவரை தாக்கினர். இதில் விவேக் படுகாயமடைந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுபற்றி மேலவளவு போலீசில் தேடிவந்த செல்வம் புகார் செய்தார். அந்த மனுவில், எனக்கும் அ.வல்லாளப்பட்டியை சேர்ந்த ராஜபிரபு, இளவரசன், சவுந்தரவேல், மகேந்திரன், கடத்திநேந்தல், கணபதிநகர் சேது ஆகிய 5 பேருக்கும் இடையில் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் அவர்கள் எனது தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்து, ரூ.20லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரியில் கடத்திச்சென்று விட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரித்து நடவடிக்கை வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மேலவளவு போலீசார், புகார் கூறப்பட்ட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் சேது என்பவர் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News