பொதுமக்களின் கோரிக்கைகளை அலுவலர்கள் விரைந்து முடிக்க வேண்டும்; கலெக்டர் பேச்சு
- பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
- தூய்மை பணியாளர்கள் மற்றும் பலரை பாராட்டி கவுரவித்தார்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் ஊராட்சி ஒன்றியம், உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு பேசியதாவது,
முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க நவம்பர் 1 உள்ளாட்சி தினத்தினை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் நீடித்த வளர்ச்சி இலக்குகள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 589 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது.
அந்த வகையில் உஞ்சியவிடுதி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவினங்கள் குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊட்டச்சத்து இயக்கம், பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டு வரி சொத்து வரி செலுத்துதல், வேளாண்மை உழவர் நலத்துறை, நமக்கு நாமே திட்டம், மகளிர் திட்டம் மற்றும் முதியோர் உதவி எண், விவசாயிகள் கடன் அட்டை போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதித்து. பொதுமக்களுடைய பல்வேறு கோரிக்கைகளை கேட்டறிந்து விரைந்து முடித்திட அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கலெக்டர் தூய்மை பாரத் இயக்கம் திட்டத்தின் கீழ் கொரோனா பெருந்தொற்று காலம் முதல் தற்போது முடிவடைந்த நம்ம ஊரு சூப்பர் இயக்கத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி சிறப்பாக சேவை புரிந்த தூய்மைக் காவலர்கள் உள்ளிட்ட தூய்மை பணியாளர்களுக்கும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கிராம சபை மூலம் பாராட்டி கவுரவித்தார்.
இதில் உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் நமச்சிவாயம், உதவி இயக்குனர் (வேளாண்மை துறை) சுதா, கால்நடைத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், ஒன்றிய குழு தலைவர் செல்வம் சவுந்தர்ராஜன், ஊராட்சி தலைவர் வெங்கடாசலம், துணைத் தலைவர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்தானகிருஷ்ணன், குமரவடிவேல், ஊராட்சி செயலர் மருதாசலமூர்த்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.