தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி தொடக்கம்
- தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது
- மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்
பெரம்பலூர்,
பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் சார்பில் வேளாண்மை கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண்மை கண்காட்சி நேற்று துவங்கியது.கண்காட்சி துவக்க விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி வேளாண்மை கல்லூரி முதல்வர் சாந்தகோவிந்த் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
மாவட்ட போலீஸ் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, கல்விக்குழும துணை தலைவர் அனந்தலட்சுமி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் நிவானி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைத்தனர்.கவுரவ விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் விரிவாக்க இயக்குனர் முனைவர் முருகன் , வேளாண் இணை இயக்குநர் சங்கரநாராயணன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.
கண்காட்சியில் அனைத்து வகையான நாட்டு விதைகள், விதை விதைக்கும் கருவி, மக்காச்சோள புதிய ரக விதைகள், களை எடுக்கும் கருவி, ரசாயன களைக் கொல்லிகள், ரசாயனம் அல்லாத பூச்சி கொல்லிகள், நவீன அறுவடை இயந்திரங்கள், உழவும் உழவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்கள், வெங்காயத்தாள் உரிக்கும் இயந்திரங்கள், சொட்டு நீர் பாசனம் மற்றும் இதர நுண்ணிய நீர் பாசன இயந்திர வகைகள், நவீன பூச்சி கொல்லி மற்றும் உர தெளிப்பான் எனும் ட்ரோன், விவசாயிகளுக்கு நிதி தரும் வங்கிகள் என 114 அரங்குகளில் விவசாயம் சம்பந்தமான அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதனை விவசாயிகள், விவசாய கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அனுமதி இலவசம். பொதுமக்களும், விவசாயிகளும் பார்வையிட்டு பயன்பெறலாம்.