சட்ட விரோதமாக மது விற்ற பெண் உள்பட இருவர் கைது
அகரம்சீகூர்,
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து மங்களமேடு அருகே ரஞ்சன்குடி கிராம பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளர் ராமசந்திரன் மற்றும் அவரது குழுவினர் சிறப்பு ரோந்து மேற்கொண்டு வந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காவல்துறையினரை கண்டதும் தப்பி செல்ல முயன்றனர்.அவர்களை துரத்தி பிடித்து விசாரணை செய்ததில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் ரஞ்சன்குடி பூக்காரத் தெருவைச் சக்திவேல்( வயது 45),
மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அங்காளம்மன் கோவில் தெருவில் வசிக்கும் லெட்சுமி என்பது தெரியவந்தது. மேலும் அவர்களது இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சட்டத்திற்கு புறம்பாக மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இருவரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து 180 மி.லி அளவுள்ள 25 -மது பாட்டில்கள் மற்றும் ரூ.8710 பணத்தையும் மது கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.