உள்ளூர் செய்திகள் (District)

கோவை அவினாசி ரோட்டில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க ஏற்பாடு

Published On 2023-04-19 09:45 GMT   |   Update On 2023-04-19 09:45 GMT
  • போதிய நடைபாதை வசதி இல்லாததால் விபத்துகள் ஏற்படுவது தெரியவந்தது.
  • சாலைகளில் உள்ள ப்ரீ-லெப்ட், இடங்கள் எவை எனவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

கோவை,

கோவை அவினாசி சாலையில் பாதசாரிகள் கடக்கும் இடங்களை தேர்வு செய்து ஒளிரும் விளக்குகள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் வாகன நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க காவல்துறையினர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களாக நடந்த சாலை விபத்துக்களை ஆய்வு செய்தனர். பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடங்களில் போதிய நடைபாதை வசதி இல்லாததால் விபத்துகள் ஏற்படுவது தெரிய வந்தது.

மாநகர காவல்துறையின் சார்பில் காந்திபுரம், லட்சுமி மில் உள்ளிட்ட சிக்னல் சந்திப்புகளில் பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவாக பிரத்யேக டைமர்கள் வைக்கப்பட்டுள்ளன. தவிர, சாலையில் இதற்கான அடையாளத்தையும் பெயிண்ட் அடித்து ஏற்படுத்தியுள்ளனர். மற்ற இடங்களில் இந்த அடையாளங்கள் இல்லை.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

மாநகரில் உள்ள அனைத்து சாலைகளிலும் பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவான இடத்தை கண்டறிந்து அங்கு ஒளிரும் விளக்கு பொருத்தி அடையாளப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, அவிநாசி சாலையில், பாதசாரிகள் கடக்க ஏதுவான இடம் எது என கண்டறிய காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, சாலை பாதுகாப்பு குழுவினர் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அவர்கள் பரிந்துரைக்கும் இடங்களில் பாதசாரிகள் சாலையை கடக்க ஏதுவாக அடையாளப்படுத்தப்படும். அந்த இடத்தில் நடந்து செல்பவர்கள், பாது காப்பாக சாலையை கடந்து செல்லலாம்.அவிநாசி சாலையை தொடர்ந்து மாநகர் முழுவதும் இந்த நடவடிக்கை விரிவுபடுத்தப்படும். அதே போல சாலைகளில் உள்ள ப்ரீ-லெப்ட், இடங்கள் எவை எனவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

Tags:    

Similar News