பனைப்பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு
- மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்தார்
- இயற்கை சார்ந்த பனை பொருட்கள் வாங்கி பயன்பெற அழைப்பு
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்) -ன் சார்பில், பனைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்தார்.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்), தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சார்பில், இயற்கை சுவைநீர் பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, சுக்குகாபி, சுக்கு பனங்கற்கண்டு மிட்டாய், சில்லு கருப்பட்டி, பனம்பழச்சாறு, பனை ஓலைப் பொருட்கள், தூரிகை வகைகள், அழகிய பனை ஓலை விசிறிகள், கதர் கிராம கைத் தொழில் பொருட்கள், தேன் மற்றும் இயற்கை சார்ந்த பாரம்பரிய உடல் நலத்திற்கு மிகவும் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பனைப் பொருட்கள், கதர் கிராம கைத் தொழில் பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே இயற்கை சார்ந்த இத்தகைய பனைப் பொருட்கள் மற்றும் உணவுகளை அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) து.தங்கவேல், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை பனைப் பொருள் திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், கதர் அங்காடி மேலாளர் என்.கருப்பையா, பனைத் தொழில் வல்லூநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.