- ராமநாதபுரத்தில் தடைக்கால நிவாரணத்தை வழங்க வேண்டுமென மீனவா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீனவர்களின் ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வு நடந்து வருகிறது.
ராமநாதபுரம்
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் மீன்கள் இனப்பெருக்கத்தை கவனத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை மீன்பிடித் தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவா்கள் நலன் கருதி அரசு சாா்பில் நிவாரண நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் 37 ஆயிரத்து 986 குடும்பங்களுக்கு நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
குடும்பத்துக்கு தலா ரூ.6 ஆயிரம் என நிதி அறிவித்து சம்பந்தப்பட்டோா் வங்கிக்கணக்கிலும் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் தடைக்கால நிவாரணத்தை இன்னும் 3,900 பேருக்கு வழங்கவில்லை என மீனவா்கள் சங்கத்தினா் கூறிவருகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநா் காத்தவராயன் கூறுகையில், நடப்பு ஆண்டில் புதிதாக நிவாரணம் பெறுவதற்கு சோ்க்கப்பட்ட 3,900 பேருக்கு மட்டுமே இன்னும் நிவாரண நிதி அளிக்கப்படவில்லை.
அவா்களது ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டு கள ஆய்வு நடந்து வருகிறது. ஆய்வு முடிவுக்குப் பிறகே நிதி அளிக்கப்படும் என்றார்.