தலைமறைவான கார் டிரைவர் 3 ஆண்டுகளுக்கு பிறகு கைது
- வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது.
- தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே கடந்த 2020-ம் ஆண்டு 14 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதாக சேலம் குழந்தைகள் நல ஆணையருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நல அலுவலர், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சிறுமியை மீட்டு விசாரித்தனர்.
இது தொடர்பாக வீரகனூர் அருகே ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் செல்வம் (38) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் செல்வத்தை போலீசார் கைது செய்யவில்லை.
இந்த நிலையில் தற்போது அந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை படித்த நீதிபதி, சிறுமியின் வாக்குமூலம் தெளிவாக இருப்பதால் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட செல்வத்தை கைது செய்து ெஜயிலில் அடைக்க உத்தரவிட்டார்.
ஜெயிலில் அடைப்பு
இதையடுத்து வீரகனூர் போலீசார், வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்து வந்த செல்வத்தை, செக்கனூர் பொன்னாளி அம்மன் கோவில் அருகில் நேற்று கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார், செல்வத்தை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டு தலைமறைவாக இருந்த கார் டிரைவர் தற்போது தான் கைது செய்து இருக்கும் சம்பவம் வீரகனூர் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.