உள்ளூர் செய்திகள் (District)
மாடியில் இருந்து தவறி விழுந்து சமையல் தொழிலாளி காயம்
மாடியில் இருந்து தவறி விழுந்து சமையல் தொழிலாளி காயம் ஏற்பட்டது.
சேலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சூடன். இவரது மகன் அருண் (வயது 34). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்வதற்காக வந்திருந்தார். நேற்று இரவு சமையல் வேலையை முடித்த பிறகு அந்த மண்டபத்தின் உள்ள இரண்டாவது மாடியில் தூங்க சென்றார்.
அப்போது மாடியில் உள்ள கைப்பிடி சுவற்றின் மீது சிறிது நேரம் உட்கார்ந்து இருந்த போது தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த சக ஊழியர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.