விபத்தில் கணவனை இழந்த பெண்ணுக்கு ரூ.90 லட்சம் இழப்பீடு - மாவட்ட முதன்மை நீதிபதி வழங்கினார்
- சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் இன்று நடந்தது.
- விபத்து தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
திருப்பூர் :
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்வர்ணம் ஜே.நடராஜன் வழிகாட்டுதலின் படியும் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் திருப்பூரில் இன்று நடந்தது.இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த வினோத் குமார் என்பவர் 2020 ஆம் ஆண்டு தனது காரில் தாய், மனைவி, குழந்தை ஆகியோருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வினோத்குமார் பலியானார். இந்த விபத்து தொடர்பாக குன்னத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் கணவனை இழந்த மனைவி மற்றும் குழந்தைக்கு ரூ.90 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இதனை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜே.நடராஜன் வழங்கினார்.