அவினாசியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- சிலைகளை சேதப்படுத்தி அங்கிருந்த பூஜைப் பொருட்களை தூக்கிவீசி நாசப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
- அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பினர், திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் என பல சிறப்புகள் பெற்ற கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கடந்தத 22-ந் தேதி மர்ம நபர் உள்ளே புகுந்து சிலைகளை சேதப்படுத்தி அங்கிருந்த பூஜைப் பொருட்களை தூக்கிவீசி நாசப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர். இதற்கு ஆன்மீக அமைப்பினர், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி நேற்று இந்து முன்னனி சார்பில் அவினாசி புதிய பஸ் நிலையம் அருகில் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், திருப்பூர், கரூர் காங்கயம், பவானி, புளியம்பட்டி வெள்ளகோவில் ராசிபுரம் ,திண்டுக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்துஇந்து அமைப்பினர், அனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பினர், திரளான பெண்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.