திருப்பூரில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் மேயர் நேரடி ஆய்வு - சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
- மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக திருப்பூர் குமரன் ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த மழையின் காரணமாக திருப்பூர் சத்யாநகர் உள்ளிட்ட சில பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.இதனால் பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். இதனை அறிந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், மழைநீரை விரைவாக அப்புறப்படுத்த மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்குவதற்கும், உணவுக்கும் ஏற்பாடு செய்து கொடுத்தார்.
இதேபோல் இன்று காலை செரிப் காலனி, தோட்டத்து பாளையம், ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கு தேங்கி நின்ற மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் வருங்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.