ரெயில்வே மேம்பால பணியின்போது பொக்லைன் கவிழ்ந்து டிரைவர் பலி
- பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லையில் இருந்து மேலப்பாளையம், சேரன்மகாதேவி வழியாக பாபநாசம் செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்காக சேரன்மகாதேவி பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தை கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பால பணிக்காக இன்று காலை பொக்லைன் எந்திரம் மூலம் மண் கொட்டப்பட்ட இடத்தில் சமன்படுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பொக்லைன் எந்திரம் சுமார் 20 அடிக்கும் மேல் இருந்த மண் உச்சியில் இருந்து உருண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பொக்லைன் ஆபரேட்டரான நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மகேந்திரன் அதன் அடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனடியாக அங்கு பணிபுரிந்த சக தொழிலாளர்கள் சேரன்மகாதேவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சேரன்மகாதேவி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர் முகமது தலைமையிலான போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் அங்கே விரைந்து சென்றனர்.
தொடர்ந்து கிரேன் மூலமாக பொக்லைன் எந்திரத்தை அப்புறப்படுத்தி பலியான மகேந்திரன் உடலை மீட்டனர். அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.