காந்திபுரத்தில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்த திருநங்கை
- 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார்.
- கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கோவை,
கோவை காந்திபுரம் சத்தி சாலையில் ஆம்னி பஸ் நிலையம் அருகே பயன்பாடு இல்லாத காலி இடத்தில் ஓலை குடிசை ஒன்று இருந்தது. அங்கிருந்து நேற்று திடீரென துர்நாற்றம் வீசியது. இதுபற்றி அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
ரத்தினபுரி போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் கட்டிலுக்கு அடியில் பிணமாக கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் அரை நிர்வாண கோலத்தில் காணப்பட்டது. மேலும் அருகில் மதுபாட்டில்களும் கிடந்தன. அந்த நபரின் உடலை போலீசார் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபர் யார், அவர் எப்படி இறந்தார் என்பது பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் திருநங்கை என்பது தெரியவந்தது.
அந்த திருநங்கை எந்த ஊரைச் சேர்ந்தவர், அவர் எப்படி அந்த இடத்துக்கு சென்றார் என்று தெரியவில்லை. அவரை யாராவது அழைத்துச் சென்று கொலை செய்து அதனை மறைப்பதற்காக தீ வைத்து எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக காந்திபுரம் பகுதியில் வசிக்கும் திருநங்கைகளிடம் போலீசார் விசாரிக்கிறார்கள். உங்களுடன் வசித்த திருநங்கைகளில் யாராவது மாயமாகி இருக்கிறார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.
மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இறந்து கிடந்த திரு நங்கை செல்லும் காட்சிகள் கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளதா என ஆய்வு செய்ய ப்படுகிறது.