உள்ளூர் செய்திகள்

திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள் கொள்ளை

Published On 2022-09-06 09:45 GMT   |   Update On 2022-09-06 09:45 GMT
  • திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது
  • சி.சி.டி.வி.கேமரா மூலம் சிக்கிய 3 கொள்ளையர்கள்

திருச்சி:

திருச்சியில் திருமணத்துக்கு வாங்கி வைத்திருந்த 70 பவுன் நகைகள், மற்றும் ரூ. 1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த 3 நபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி கருமண்டபம், ஆர்.எம்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மனைவி நாகலட்சுமி (வயது55). தனபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். நாகலட்சுமி ரயில்வே துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாகலட்சுமியின் சகோதரன் மகளுக்கு நாளைக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அதற்கான நகைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொருட்களை நாகலட்சுமி பொறுப்பேற்று வாங்கி அவரது வீட்டில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மேலும் நகைகள் வாங்குவதற்காக, வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் என் எஸ்.பி.சாலையில் உள்ள பிரபல நகைக்கடைக்குச் சென்றுள்ளார். பிற்பகலில் திரும்பி வந்து பர்த்தபோது, வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, திருமணத்துக்காக வாங்கி பீரோவில் வைத்திருந்த 70 பவுன் நகைகளையும், ரூ. 1 லட்சம் ரொக்கத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில், கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் தடவியல் பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு புலன்விசாரணை நடத்தினர். விசாரணையில் சந்தேகத்துக்குரிய 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் திருட்டில் தொடர்புடையது தெரிய வந்தது. தொடர்ந்து விடிய, விடிய அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News