ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம்
- 10 லட்சம் ரூபாய் நோட்டுக்களை கொண்டு அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
மண்ணச்சநல்லூர்,
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோவிலில் வைகாசி தேர்த்திருவிழாவையொட்டி நேற்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இக்கோவிலில் 39-ம் ஆண்டு வைகாசி திருவிழா கடந்த மே 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து நேற்று (22-ந்தேதி) காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணியளவில் முத்துமாரியம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளை கொண்டு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் தனலெட்சுமி அலங்காரம் தரிசிக்க குவிந்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று காலை சப்பர தேரில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.