என்ஜினீயரிங் பட்டதாரி மின்சாரம் பாய்ந்து சாவு
- வீட்டில் இன்வெர்ட்டர் மாற்றியபோது சம்பவம்
- போலீசார் வழக்கு பதிந்து விசாரணை
திருச்சி.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள வாசன் சிட்டி 5-வது குறுக்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மகன் முத்துராஜா (வயது 27). பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துள்ள முத்துராஜா சமீப காலமாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வந்தார்.இந்த நிலையில் வீட்டில் இருந்த இன்வெர்ட்டர் இணைப்பினை வீட்டுக்கு வெளியே மாற்றி அமைக்கும் வேலையில் அவர் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக முத்துராஜா மீது மின்சாரம் பாய்ந்தது.இதில் தூக்கி வீசப்பட்ட அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு முத்துராஜா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை ராமசுப்பிரமணியன் சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.என்ஜினீயரிங் பட்டதாரி மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.