தா.பேட்டை அருகே பரிதாபம்-கல்லூரி பேராசிரியை விபத்தில் பலி
- தா.பேட்டை அருகே கல்லூரி பேராசிரியை விபத்தில் பலியானார்
- இச்சம்பவம் குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தா.பேட்டை
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகே பைத்தம்பாறை மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மனைவி பாமாப்ரீத்தா (வயது 45). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் கல்லூரியில் பணி முடித்துவிட்டு பாமாபிரீத்தா தனது கணவருடன் துலையாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி உள்ளார்.பின்னர் பைத்தம்பாறை கிராமத்திற்கு கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஜெம்புநாதபுரம்-தா.பேட்டை செல்லும் சாலையில் மங்கலம்புதூர் பஸ் நிறுத்தம் அருகே பின்னால் சதீஷ் (32) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் பாமாபிரீத்தா மீது மோதியது.இந்த விபத்தில் பாமாபிரீத்தா தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் கணவன், மனைவி இருவரையும் முசிறி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு பாமாபிரீத்தாவை கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லூம் வழியிலேயே பாமாபிரீத்தா பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து பாமாபிரீத்தா உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.