சமயபுரம் மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் வாசல் திறப்பு
- 2015ம் ஆண்டு திருப்பணிக்காக மூடப்பட்டது
- கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில் தற்போது திறப்பு
மண்ணச்சநல்லூர்,
தமிழகத்தில் உள்ள சக்தி ஸ்தலங்களில் திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் முதன்மையானதாக திகழ்கிறது. வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளி, நோய்கள் தீர்க்கு அம்மனாக இருப்பதால் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான மண்டபம் ரூ.13 கோடியே 80 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொளி காட்சி மூலமாக மண்டபத்தை திறந்து வைத்தார்.இதற்கிடையே கடந்த 2015 ஆம் ஆண்டு கோவிலின் ராஜகோபுரம் திருப்பணிக்காக மூடப்பட்டது. மேலும் ராஜகோபுரத்தின் திருப்பணி நிறைவடைந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம் வாயில் திறக்கப்பட்டு, அதன் வழியாக பக்தர்கள் செல்ல கோவிலின் இணை ஆணையர் கல்யாணி உத்தரவிட்டார். அதன்படி பக்தர்கள் ராஜகோபுரம் வழியாக சென்று அம்மனை தரிசித்து விட்டு ராஜகோபுரத்தின் வழியாக வெளியே செல்வது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறி கோவில் ஆணையரிடம் நன்றி தெரிவித்தனர்.