- ஆம்புலன்சுக்கு வழி விட்ட மாரியம்மன் பக்தர்கள்
- தங்கு தடையின்றி பெருங்கூட்டத்திற்குள் வந்து சென்ற ஆம்புலன்ஸ்
திருச்சி மாவட்டத்திலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து வரும் பிரமாண்ட திருவிழா என்றால் அது மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில் திருவிழா தான். மணப்பாறை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த மக்களும் வந்தும் அம்மனுக்கு காப்பு கட்டி பால்குடம் எடுப்பார்கள். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்து கொண்ட நிலையில் எங்கு திரும்பினும் மனித தலைகளாக காட்சி அளித்தது.
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட பால்குட ஊர்வலம் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. வெயிலின் தாக்கம் காரணமாக சிலருக்கு மூச்சு திணறலும், சிலருக்கு மயக்கமும் ஏற்பட்டுள்ளது. உடனே ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பல்லாயிரக்கணக்கானவர்களை பார்த்ததும் சற்று மிரண்டு போயுள்ளனர். இத்தனை பெரும் கூட்டத்திற்குள் எப்படி ஆம்புலன்சை செலுத்துவது என்று அவர்கள் மலைத்து நிற்பதை புரிந்து கொண்ட பக்தர்கள். யாருடைய வழிகாட்டுதலும் இன்றி தாமாக வழி ஏற்படுத்தினர். சிலரோ பாதிக்கப்பட்டோர் உள்ள இடத்திற்கு ஆம்புலன்சை விரைந்து அழைத்து சென்றனர். உடல் உபாதைக்குள்ளானவர்களும், விரைந்து ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஆயிரம் தான் சாமி, பக்தி என்று சொன்னாலும், உயிர்காக்க செல்லும் ஆம்புலன்ஸ்சுக்கு டக்குன்னு வழி ஏற்படுத்தி கொடுத்த, அந்த வேப்பிலை மாரியம்மன் பக்தர்களின் மனித நேயம் மிக்க....
`அந்த மனசு தான் சார் கடவுள்'