மிளகாய் தோட்டத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல்
- 5 கிலோ சிக்கியது
- பெண் உட்பட 2 பேர் கைது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள பீஞ்சமந்தை மலை கிராமத்தில் வேப்பங்குப்பம் போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
கஞ்சா செடிகள்
அப்போது விவசாய நிலத்தில் கஞ்சா வாசனை வந்துள்ளது. இதனையடுத்து அங்கு சென்று பார்த்த போது மிளகாய் செடிகள் இருந்துள்ளன. சற்று உள்ளே சென்று பார்த்த போது கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதன்பின்னர் மிளகாய் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த 2.5 கிலோ எடை கொண்ட கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர். அருகில் இருக்கும் மற்றொரு நிலத்தில் தேடிப்பார்த்த போது அங்கும் கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது.
அங்கு இருந்த 2.5 கிலோ கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மொத்தம் 5 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் பயிரிடப்பட்ட நிலத்தின் உரிமையாளர் கமலா(வயது45), மற்றொரு நிலத்தின் உரிமையாளர் முத்துக்குமார் (21) என்ற 2 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.