திண்டிவனம் அருகே அதிகாரிகளை முற்றுகையிட்ட கிராம மக்கள்
- 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது.
- அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அண்டப்பட்டு கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக அண்டப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவில் இருந்த தரை பாலம் சேதமடைந்தது. இதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், பி.டி.ஒ. அலுவலகங்களில் பல முறை புகார் தெரிவித்தனர். சேதம் அடைந்த பாலத்தை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது.மேலும், இந்த பாலம் வழியாக சென்ற 20-க்கும் மேற்பட்டோர் பாலத்தில் விழுந்து காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் ஊர் பொதுமக்கள் ஒன்றிய கவுன்சிலர் எழிலரசனிடம் இதுகுறித்து மனு அளித்தனர். இதையடுத்து கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் ஈச்சேரி சேகர், கவுன்சிலர் எழிலரசன் ஆகியோர் அவர்களது சொந்த பணத்தில் பாலத்தை கட்ட முடிவு செய்தனர்.அதன்படி ரூ.12 லட்சம் செலவில் பாலத்தை கட்டும் பணியை கீழ்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகியோர் தொடங்கினர். இதையறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். இதனால் அப்பகுதி கிராம மக்கள் அங்கு திரண்டு அதிகாரி களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினார். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.