உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி

Published On 2023-01-16 08:16 GMT   |   Update On 2023-01-16 08:16 GMT
  • திருச்சுழி அருகே மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
  • இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மானூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 28). இவர் தனது நண்பர்கள் முத்துக்குமார், நாகூர்கனி ஆகயோருடன் விடத்தகுளத்தில் இருந்து வீரசோழன் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிர்திசையில் கணேசமூர்த்தி என்பவர் மலைச்சாமி என்பவருடன் மோட்டார்சைக்கிளில் வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தினேஷ்குமார், கணேசமூர்த்தி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News