- விருதுநகர் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மதுராபுரி என்ற கம்மாபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 32). இவரும், இவரது மனைவியும் நூற்பாலைகளில் வேலை செய்கின்றனர். சம்பவத்தன்று செல்வராஜ் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5½ பவுன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து கீழராஜகுலராமன் போலீஸ் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லவகுசா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சண்முகசுந்தரபுரத்தை சேர்ந்தவர் வேலு(வயது64). இவர் சம்பவத்தன்று அடகு நகைகளை மீட்க ரூ.70 ஆயிரத்தை பையில் வைத்துக்கொண்டு தனியார் நிதி நிறுவனத்துக்கு சென்றார். ஆனால் அடுத்த மாதம் தான் நகையை மீட்க முடியும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பணத்துடன் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த பணப்பையை திருடிக்கொண்டு தப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.