சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை
- கொல்கத்தாவில் நடந்த தேசிய ஹேக்கத்தான் போட்டியில் சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்தது.
- இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
சிவகாசி
மத்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி மையம், இந்திய தேசிய பொறியியல் அகாடமி மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் இணைந்து தேசிய அளவிலான ஹேக்கத்தான் போட்டியை நடத்தியது.
கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் நடந்த இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் சிவகாசி பி.எஸ்.ஆர் பொறியியல் கல்லூரியின் மின்னனுவியல் மற்றும் தொலை தொடர்பியல் துறை மாணவர்கள் எம்.இசக்கிமுத்து, கே.ஹரி தினேஷ்குமார்,
எம்.மனோஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு ''டாப்-5'' இடம் பெற்று சாதனை படைத்தனர்.
போட்டியின் முதல் சுற்றில் மாணவர்கள் தங்கள் செயல்திட்டத்திற்கான விளக்கத்தை ஆன்லைனில் சமர்ப்பித்தனர்.அதில் இருந்து மொத்தம் 95 அணிகள் மட்டுமே ேதர்வு செய்யப்பட்டனர்.இதில் பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ''பங்குச் சந்தை கணிப்பு'' என்ற தலைப்பில் செயல் திட்டத்தை வெளியிட்டனர்.
தொடர்ந்து 30 மணி நேரம் நடந்த ஹேக்கத்தான் போட்டியில் திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களை பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி, முதல்வர் மாரிச்சாமி, துறைத்தலைவர் வளர்மதி, பேராசிரியர்கள் கருப்பசாமி, மதினா, விமலா ஆகியோர் பாராட்டினர்.