மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
- நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மணப்பள்ளி அருகே தீர்த்தாம்பாளையம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
- இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மணப்பள்ளி அருகே தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50 ). இவரது மனைவி ராதாமணி( 47). இவர்கள் இருவரும் சோழசிராமணி அருகே உள்ள தேவம் பாளையத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.
சதாசிவம் மோட்டார் பைக்கை ஓட்டி வந்தார். ராதாமணி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தார். கபிலர்மலை -ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மோட்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது.
இதில் நிலை தடுமாறிய சதாசிவம் மனைவியுடன் தவறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவர்களை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக ராதாமணியை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.