செய்திகள் (Tamil News)

எடியூரப்பா இன்று மீண்டும் ஆளுநருடன் சந்திப்பு - ஆட்சியமைக்க அவகாசம் கேட்டார்

Published On 2018-05-16 06:11 GMT   |   Update On 2018-05-16 06:11 GMT
கர்நாடக பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அவகாசம் வழங்கும்படி கேட்டுள்ளார். #KarnatakaElection #YeddyurappaMeetsGovernor
பெங்களூரு:

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுகிளில் பா.ஜ.க. வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தபோதிலும், ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லை. இருப்பினும் ஆட்சியைக் கைப்பற்ற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

காங்கிரஸ் 78 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் கர்நாடக பிரகின்யவந்தா கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத நிலையில், அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமை கோரி உள்ளது. அதேசமயம் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கின்றன. யாரை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்பதைப்பொருத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வு இருக்கும்.



இந்த பரபரப்பான  சூழ்நிலையில், பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்தார். அப்போது, அவர் ஆட்சியமைக்க மேலும் அவகாசம் வழங்க கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அப்போது மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் ஆகியோரும் சென்றனர்.

இதற்கிடையே பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்ற பா.ஜ.க. தலைவராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டுள்ளார். #KarnatakaElection #YeddyurappaMeetsGovernor
Tags:    

Similar News