செய்திகள்
பிரதமரின் பாதுகாப்பில் எந்தவொரு அரசியலும் கூடாது - காங்கிரஸ் வலியுறுத்தல்
பிரதமரின் பாதுகாப்பு பற்றிய விவகாரத்தில் எந்தவொரு அரசியலும் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.#PMModi #Threat #Congress
புதுடெல்லி:
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே போலீசார் பீமா கோரேகான் வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரை சமீபத்தில் கைது செய்தனர். அவர்களில் ஒருவரிடம் இருந்து கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில், பிரதமர் நரேந்திர மோடியை ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது போன்று கொல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி பவன் கேரா கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பில் எந்தவொரு அரசியலும் இருக்கக்கூடாது என்றார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமரின் பாதுகாப்பு என்பது தீவிர கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விஷயம். பயங்கரவாதம் மற்றும் நக்சல்வாதம் ஆகியவற்றின் வலியை காங்கிரஸ் கட்சி உணர்ந்திருக்கிறது. மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை இழந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களை நக்சலைட்டுகள் என போலீசார் கூறுகின்றனர். மத்திய மந்திரி அத்வாலே அவர்களை தலித்துகள் என கூறுகிறார். இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். இதனை அரசியலாக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் கூறுகையில், எப்போது எல்லாம் மோடியின் செல்வாக்கு சரிகிறதோ அப்போது எல்லாம் கொலைக்கு சதிதிட்டம் என செய்திகள் பரப்பப்படும். இது பிரதமர் மோடியின் பழைய தந்திரம் என்றார். #PMModi #Threat #Congress