தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆந்திர போலீசார் 6 பேர் கைது
நகரி:
தெலுங்கானா மாநிலத்தில் வருகிற டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு பிரசாரம் நடந்து வருகிறது.
ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
இந்த நிலையில் ஜெகீத் யாலா மாவட்டம் தர்மபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதே போல மஞ்கீர்யாலா தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஆந்திர போலீஸ்காரர்களான நாராயண ரெட்டி, மதுபாபு, வெங்க டேஷ்வரராவ், ராமகிருஷ்ண ரெட்டி, ராம்பாபுஎன்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இதுபற்றி முதல்-மந்திரி சந்திரசேகரராவ் மகனும், மந்திரியுமான தாரகராமராவ் கூறும் போது, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆந்திர போலீசார் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆந்திர போலீசாரின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் உள்ளது. அங்கு செல்லாமல் தெலுங்கானா மாநில மைய பகுதியில் உள்ள தொகுதிகளில் ஆந்திர போலீசாருக்கு என்ன வேலை இருக்கிறது என்றார். #TelanganaPolls #ECI