இந்தியா (National)
பிப்ரவரி மாதத்திற்குள் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு உச்சத்தை எட்டும் - அமெரிக்க சுகாதார ஆய்வாளர் தகவல்
ஒமைக்ரானால் பாதிப்படுவோர் எண்ணிக்கை ஐந்து லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி
டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிக அளவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவன தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே, இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன்படி:
இந்தியாவில் ஒமைக்ரான் அலை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு டெல்டா வைரஸ் அலையின் தாக்கத்தை விட இதில் அதிகம் பேர் பாதிக்கப்படுவார்கள். ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அடுத்த மாதம் சுமார் ஐந்து லட்சம் வரை உயரக்கூடும். ஒமைக்ரான் வைரஸின் வீரியம் குறைவானது. நோய் தொற்று உள்ளவர்களில் 85 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறிகளும் இருக்காது. தடுப்பூசி அளவுகள் அதிகரிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பை வழங்குகிறது. ஒமைக்ரான் பாதிப்பில் இறப்புகள் மிக குறைவாக இருக்கும். இவ்வாறு டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே குறிப்பிட்டுள்ளார்.