இந்தியா (National)
உக்ரைனில் இருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற உதவுங்கள்... புதினிடம் பிரதமர் மோடி வேண்டுகோள்
உக்ரைனில் சண்டை நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷிய அதிபரிடம் பேசினார்.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் போர் 7வது நாளாக இன்றும் நீடிக்கிறது. உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறும்படி இந்திய தூதரகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியர்கள் கார்கிவ் நகரில் இருந்து வெளியேறியவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்கள் கார்கிவ் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேசினார். அப்போது, உக்ரைனில் தற்போதைய நிலவரம் மற்றும் சண்டை நடைபெறும் பகுதிகளில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்து ரஷிய அதிபரிடம் பேசினார். குறிப்பாக கார்கிவ் நகரில் உள்ள இந்திய மாணவர்களை வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ரஷிய ராணுவம் உதவவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.