உத்தரபிரதேசத்தில் மதமாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது
- பாரதிய ஜனதா பெண் தொண்டர் சுனிதா அரோரா போலீசில் ஒரு புகார் கொடுத்தார்.
- சட்டவிரோத மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த இப்ராகிம் தாமஸ், அவரது மனைவி ரீவா மற்றும் உறவு பெண் பபிதா ஆகியோர் உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத் அருகே உள்ள கோடா பகுதியில் வசித்து வருகிறார்கள்.
இப்ராகிம் தாமஸ் அங்கு மத ஊழியம் செய்து வருகிறார். இவர் மீது அதே பகுதியை பாரதிய ஜனதா பெண் தொண்டர் சுனிதா அரோரா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் இப்ராகிம் தாமஸ் மற்றும் அவரது மனைவி ரீவா ஆகியோர் தன்னை ஒரு பார்லருக்கு வரவழைத்து தன்னை மதமாற்ற முயற்சித்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார், இப்ராகிம் தாமஸ், அவர் மனைவி ரீவா மற்றும் உறவு பெண் பபிதா ஆகியோர் மீது சட்டவிரோத மதமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.