பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்.. 4 போலீசார் இடைநீக்கம்
- அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் புலான்ஷர் பகுதியை சேர்ந்தவர் அமித். கடந்த 21 ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு, வீடு திரும்பிக் கொண்டிருந்த அமித்-ஐ காவலர்கள் தடுத்து நிறுத்தினர். அதன்பிறகு, அவர் வந்த காரில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார் என்று கூறி அமித்-ஐ காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அமித் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், சம்பவத்தன்று அமித் வந்த காரை போலீசார் நிறுத்துவது, அதன்பிறகு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் இருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து காரில் வைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிகர்பூர் காவல் நிலைத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து வாலிபர் மீது பொய் வழக்கு பதிவு செய்த விவகாரத்தில் அவுட்போஸ்ட் இன்சார்ஜ், சிகர்பூர் காவல் நிலைய இன்சார்ஜ் மற்றும் இரு கான்ஸ்டபில்கள் என மொத்தம் நான்கு போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்று குற்றப்பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் ராகேஷ் குமார் மிஷ்ரா தெரிவித்தார்.