இந்தியா

சீன கப்பலில் இருந்தது பாகிஸ்தான் அணு ஆயுத திட்டத்திற்கான கருவிகளா?

Published On 2024-03-02 13:36 GMT   |   Update On 2024-03-02 13:36 GMT
  • அக்கப்பலை பரிசோதித்த போது "சிஎன்சி" மெஷின்கள் எனப்படும் இயந்திரம் இருந்தது
  • அணு ஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்த கூடியவை என DRDO அதிகாரிகள் தெரிவித்தனர்

சீனாவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு பயணித்த "சிஎம்ஏ சிஜிஎம் அட்டிலா" (CMA CGM Attila) எனும் சரக்கு கப்பல், மும்பையின் நவ சேவா (Nhava Sheva) துறைமுகம் வழியாக செல்லும் போது இந்திய பாதுகாப்பு அமைப்புகளால் நிறுத்தப்பட்டது.

பாகிஸ்தானின் அணு ஆயுத மற்றும் நீண்ட தூர ஏவுகணை திட்டங்களுக்கு தேவைப்படும் முக்கிய பொருட்களை இந்த கப்பல் கொண்டு செல்வதாக இந்திய அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சுங்கத்துறை அதிகாரிகள் இக்கப்பலை பரிசோதித்த போது அதில் "சிஎன்சி" (Computer Numerical Control) மெஷின்கள் எனப்படும் இயந்திரம் இருந்தது.

தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கழகத்தை (DRDO) சேர்ந்த அதிகாரிகள் அந்த சிஎன்சி இயந்திரத்தை பரிசோதித்த பின்னர் அது பாகிஸ்தானின் அணு ஆயுத திட்டங்களுக்கு பயன்படுத்த கூடியது என தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த மெஷின்களை இந்திய அதிகாரிகள் கைப்பற்றினர்.

இந்த இயந்திரத்திற்கான ஆவணங்களில், சீனாவின் "ஷாங்காய் ஜேஎக்ஸ்ஈ குளோபல் லாஜிஸ்டிக்ஸ்" எனும் நிறுவனத்திலிருந்து "பாகிஸ்தான் விங்க்ஸ்" எனும் சியால்கோட் (Sialkot) பகுதியை சேர்ந்த நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், இந்திய அதிகாரிகளின் தீவிர விசாரணையில் 22,180 கிலோகிராம் எடையுள்ள இந்த இயந்திரம், சீனாவின் "டையுவான் மைனிங்" எனும் நிறுவனத்தில் இருந்து பாகிஸ்தானின் "காஸ்மாஸ் என்ஜினியரிங்" நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

இது தொடர்பான விசாரணை தொடர்கிறது.

அணு ஆயுத திட்டங்களுக்காக சீனாவிலிருந்து பாகிஸ்தானுக்கு கடல் வழியாக கொண்டு செல்லப்படும் கருவிகளுடன் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News