15 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
- பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்தும் விசாரித்தனர்.
- உடந்தையாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஷாஜகான்பூர்:
உத்தரபிரதேசத்தில் ஷாஜகான்பூரை அடுத்த தில்ஹார் பகுதியில் அரசு பள்ளி உள்ளது.
இங்கு 30 வயதான ஆசிரியர் ஒருவர் கம்ப்யூட்டர் பாடம் நடத்தி வந்தார். அவர் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது, அவரிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக மாவட்ட கல்விதுறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரித்தனர். மேலும் பள்ளியில் படிக்கும் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவிகளை அழைத்தும் விசாரித்தனர்.
மாணவிகளின் பெற்றோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் சுமார் 15 மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. பள்ளிக்கு செல்லும் நாட்களில் வகுப்பு முடிந்த பின்னர் ஆசிரியர் தங்களை தனியாக அழைத்து உடலை தொடுவதும், தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் பலரும் தலித் பிரிவினரை சேர்ந்தவர்கள். இதையடுத்து கல்விதுறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் கம்ப்யூட்டர் ஆசிரியரை கைது செய்தனர்.
அவரை நேற்று மாஜிஸ்தி ரேட்டு வீட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் ஜெயிலில் அடைத்தனர். இதற்கிடையே கம்ப்யூட்டர் ஆசிரியரின் செக்ஸ் சேட்டைக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஒருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியில் இருந்து உடனடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டார்.