கவர்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்: உச்சநீதிமன்றம் அதிரடி
- கவர்னருக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு
- விவகாரம் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னே, கவர்னர் செயல்பட வேண்டும்
இந்தியாவில் பா.ஜனதா ஆட்சி செய்யாத பெரும்பாலான மாநிலங்களில், மாநில அரசுக்கும் கவர்னருக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.
மேற்கு வங்காளம், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மாநிலங்கள் இதில் அடங்கும். பஞ்சாப் மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநில அரசால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்றம் "நீதிமன்றத்திற்கு முன் இதுபோன்ற விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன் கவர்னர்கள் முன்னதாக செயல்பட வேண்டும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். மசோதாவை ஆய்வு செய்யவும், ஆய்வு முடியும் வரை மசோதாவை நிறுத்தி வைக்கவும் கவர்னருக்கு அதிகாரம் உள்ளது. ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன் அதனை ஆய்வு செய்ய அதிகாரம் உள்ளது." எனக் கருத்து தெரிவித்தது.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், "மாநில கவர்னர் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதா மீது நடவடிக்கை எடுத்துள்ளார்" என்றார். அப்போது நீதிமன்றம் "இதுதொடர்பான தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்க வேண்டும்" எனத் தெரிவித்து விசாரணையை வருகிற 10-ந்தேதி ஒத்திவைத்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.