இந்தியா (National)

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகள் பாதுகாப்பாக உள்ளதா?- பவன் கல்யாண்

Published On 2024-09-24 06:22 GMT   |   Update On 2024-09-24 06:22 GMT
  • விரிவான விசாரணை நடத்துமாறு வேண்டுகோள்.
  • பாதுகாத்தார்களா விற்று விட்டார்களா என்று சந்தேகம் எழுகிறது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து 11 நாட்கள் விரதம் இருந்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்க போவதாக துணை முதல் மந்திரி நடிகர் பவன் கல்யாண் அறிவித்தார்.

அதன்படி அவர் விரதம் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் மீது நம்பிக்கையுடன் பக்தர்கள் தங்கள் சம்பாதித்த சொத்தை கடவுளுக்கு வழங்கும் பொருட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

ஆந்திரா மட்டுமின்றி தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்களில் அசையா சொத்துக்கள் கோவிலுக்கு உள்ளன. மும்பை, ஐதராபாத் நகரங்களில் பல கட்டிடங்கள் உள்ளன.

சுவாமியின் சொத்துக்களை பாதுகாப்பதை விட அவற்றை விற்று விடுவதற்கு அப்போதைய அரசு அமைத்த தேவஸ்தான குழு துடித்தது ஏன்? அவர்களை அவ்வாறு வழி நடத்தியது யார்? என்பதை நாங்கள் வெளியே கொண்டு வருவோம்.

ஏழுமலையான் சொத்துக்களை முந்தைய அறங்காவலர் குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் பாதுகாத்தார்களா அவற்றை விற்று விட்டார்களா என்று சந்தேகம் எழுகிறது.

ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சொத்து நகைகள் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News