குவைத் தீ விபத்து: டெல்லியில் உள்ள குவைத் தூதரகம் இரங்கல்
- தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
- தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் பலியாகிய நிலையில் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சார்ந்த 7 பேர் மற்றும் டெல்லி உள்பட மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் 14 பேர் ஆவர்.
இந்த தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 31 பேரின் உடல்கள் இந்திய விமான படை விமானம் மூலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டது.
விமான நிலையத்திற்கு வந்த கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மத்திய மந்திரி சுரேஷ் கோபி, தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்பட உயர் அதிகாரிகள் 31 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து, தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள குவைத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
குவைத் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த தூதரகம், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நல்ல அமைதியையும் ஆறுதலையும் வழங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளது.