ரத்தன் டாடா உடலுக்கு அரசு மரியாதை: மகாராஷ்டிர அரசு அறிவிப்பு
- ரத்தன் டாடா உடலுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
- அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மும்பை:
பிரபல இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மகாராஷ்டிர முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
ரத்தன் டாடாவின் உடலுக்கு முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும். அவரது உடலுக்கு மகாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஓர் அரிய ரத்தினத்தை இழந்துவிட்டோம். அடுத்த தலைமுறை தொழில்முனைவோருக்கு ரத்தன் டாடா எப்போதும் முன்மாதிரியாக இருப்பார். ரத்தன் டாடா கடந்த 1991-ல், டாடா குழுமத்தின் தலைவரானார். அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமம் கணிசமாக விரிவடைந்தது. மேலும் பல்வேறு தொழில்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தார். எப்போதும் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அவரது முடிவுகளும், துணிச்சலான அணுகுமுறையும், சமூக அர்ப்பணிப்பும் எப்போதும் நினைவில் நிற்கும் என பதிவிட்டுள்ளார்.