இந்தியா

மலையாள நடிகர்கள் மீது மேலும் 3 நடிகைகள் பாலியல் புகார்

Published On 2024-08-27 07:34 GMT   |   Update On 2024-08-27 07:34 GMT
  • நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
  • கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை கடந்த 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். இது தொடர்பாக கேரளாவின் முன்னணி நடிகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் தொடர்ச்சியாக கேரள சினிமா துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் பாலின பாகுபாடுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தனது அறிக்கையை கடந்த 2019-ம் ஆண்டே கேரள அரசிடம் சமர்ப்பித்தது.

ஹேமா கமிஷன் அறிக்கையை கேரள அரசு வெளியிடாமல் வைத்திருந்தது. இந்தநிலையில் கடந்த வாரம் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையை அரசு வெளியிட்டது.

அந்த அறிக்கையில் மலையாள நடிகைகள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக பரபரப்பு தகவல்கள் இடம் பெற்று இருந்தன. பட வாய்ப்புக்காக நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களை படுக்கைக்கு அழைக்கும் கலாசாரம் அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள்தான் அதிகளவில் நடிகைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. நீதிபதி ஹேமா கமிட்டியின் இந்த அறிக்கை கேரள மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நீதிபதியின் அறிக்கை வெளியான நிலையில் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை ஏராளமான நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இது மலையாள திரையுலகில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேற்குவங்க நடிகை ஸ்ரீலேகா மித்ரா கேரள இயக்குனர் ரஞ்சித் மீதும், ரேவதி சம்பத் என்ற நடிகை நடிகர் சித்திக் மீதும், மெஸ்சா என்ற காஸ்டிங் கலைஞர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.வும் பிரபல நடிகருமான முகேஷ் மீதும், ஜூபிதா என்ற நடிகை, நடிகர் சுதீஷ் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள்.


இதையடுத்து கேரள சினிமா அகாடமி தலைவர் பொறுப்பில் இருந்து இயக்குனர் ரஞ்சித்தும், மலையாள நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நடிகர் சித்திக்கும் ராஜினாமா செய்தனர்.

இந்தநிலையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெய சூர்யா, இடவேலா பாபு, மணியன்பிள்ளை ஆகியோர் மீது கவர்ச்சி நடிகை மினு பாலியல் புகார் கூறினார். ஆனால் நடிகர் முகேஷ் இதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நடிகர் மணியம்பிள்ளை தன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியுள்ளார். தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்களை கேரள கம்யூனிஸ்டு அரசு காப்பாற்ற முயற்சி செய்வதாக கேரள மாநில எதிர்க்கட்சி தலைவர் சதீசன் குற்றம் சாட்டினார். பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தப் போவதாக கேரள மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று கொல்லத்தில் உள்ள நடிகர் முகேஷ் வீட்டுக்கு மகளிர் காங்கிரசார் ஊர்வலமாக சென்றனர். முகேஷ் வீட்டை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.

நடிகர் முகேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரசார் கோஷமிட்டு நீண்ட நேரம் தர்ணா செய்தனர். இது கேரள அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மேலும் 3 நடிகைகள் தாங்கள் நடிக்க சென்ற போதும், நடிக்க வாய்ப்பு கேட்டு சென்ற போதும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பரபரப்பு பேட்டியளித்து உள்ளனர். அவர்களில் பிரபல நடிகை கீதாவிஜயனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீதா விஜயன் டைரக்டர் துளசிதாஸ் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். துளசிதாசால் தனக்கு பாலியல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என்றாலும் அதன் பிறகு அவர் தனக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்காமல் செய்தார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் அஞ்சலி அமீர், சோபியா நடிகைகளும் பரபரப்பு பாலியல் புகார்களை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக மலையாள பட உலகில் பாலியல் புகார்கள் சூறாவளி புயல் போல் வீசத் தொடங்கி உள்ளது.

இதற்கிடையே ஹேமா அறிக்கையின் அடிப்படையிலும் பாலியல் புகார்களை தெரிவிக்கும் நடிகைகளின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணை நடத்த கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 7 காவல் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை கேரள மாநில அரசு அமைத்து உள்ளது.

இந்த விசாரணை குழுவினர் இன்று (செவ்வாயக் கிழமை) தங்களது விசாரணையை தொடங்கி உள்ளனர். முதல் கட்டமாக பாலியல் புகார்கள் தெரிவித்துள்ள நடிகைகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அவர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த ஆதாரங்களை திரட்ட முடிவு செய்து இருக்கிறார்கள். அதன் பிறகு மலையாள நடிகர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News