ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்
- ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.
- இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதற்குபின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதைத்தொடர்ந்து ரஜினிகாந்திற்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரத்த குழாயில் உள்ள அடைப்பும் வீக்கமும் கண்டறியப்பட்டது. உடனடியாக அதற்கேற்ற சிகிச்சையை டாக்டர் சாய்சதீஷ் தலைமையிலான டாக்டர் குழுவினர் அளித்தனர்.
இது தொடர்பாக அப்போலோ மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குணமடைந்து வருகிறார். இன்னும் இரண்டு நாட்களில் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் என அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து லதா ரஜினிகாந்திடம் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பிரதமர் மோடி கேட்டறிந்தார். அவரிடம் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.