இந்தியா

ஜனாதிபதி ஆற்றிய உரை பா.ஜ.க.வின் அடுத்த தேர்தல் அறிக்கை போல உள்ளது: எதிர்க்கட்சிகள் கருத்து

Published On 2023-02-01 03:05 GMT   |   Update On 2023-02-01 03:05 GMT
  • மத்திய அரசு எழுதி அளிப்பதை ஜனாதிபதி பேசுவது வழக்கமானது.
  • முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

புதுடெல்லி :

பாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று உரை ஆற்றினார். அவரது உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. இதுபற்றிய பார்வை வருமாறு:-

மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ் தலைவர்):-

மத்திய அரசின் அறிக்கை, ஜனாதிபதி வழியாக வந்திருக்கிறது. புதிதாக ஏதுமில்லை. நாடு பெருமளவில் முன்னேறி இருப்பதாக அரசு கூறுகிறதே, பிறகு ஏன் வேலையில்லா திண்டாட்டம், அதிகபட்ச விலைவாசி உயர்வினால் நாட்டின் ஏழைகள் தொடர்ந்து கஷ்டப்படுகிறார்கள்?

டெரிக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்):-

மத்திய அரசு எழுதி அளிப்பதை ஜனாதிபதி பேசுவது வழக்கமானது. என்றாலும், இதில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, கூட்டாட்சியை (நிதி) வலுப்படுத்துவது, சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவது, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றுவது என முக்கிய பிரச்சினைகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆளும் கட்சியின் தேர்தல் அறிக்கை

பினாய் விஸ்வம் (இந்திய கம்யூ. மூத்த தலைவர்):-

பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, தலித்துகளுக்கு, பழங்குடியினருக்கு அதிகாரம் வழங்குதல் என்பது காகிதத்தில்தான் உள்ளது. ஜனாதிபதி உரையானது அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கான ஆளும் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் முதல் பகுதி போல உள்ளது. வார்த்தைகள் அழகானவை. ஆனால் உண்மையில் அப்படி இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

Tags:    

Similar News