இந்தியா

'அம்பானி இல்லத் திருமணத்தில் பிரியங்கா காந்தி.. ராகுல் ஒரு துறவி' - மக்களவையில் பாஜக எம்.பி. பகீர்

Published On 2024-08-07 03:17 GMT   |   Update On 2024-08-07 03:17 GMT
  • அம்பானியின் வீட்டில் வைத்து நடந்த இரவு விருந்தில் தனது குழந்தைகளுடன் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார்.
  • ராகுல் ஒரு துறவி, துறவிகளுக்கு ஜாதி கிடையாதுதான், எனவே அனுராக் பேசியது தவறுதான் என்றும் தெரிவித்தார்.

ஆசியாவின் முதன்மைப் பணக்காரரான இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கொண்டாட்டங்கள் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஆடம்பரமான முறையில் நடந்து முடிந்தது. இந்திய அரசியல் சினிமா பிரபலங்கள் முதல் உலக ஐகான்கள் வரை இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

கடந்த ஜூலை 12 ஆம் தேதி நடந்த திருமணத்திலும் பிரதமர் மோடி உட்படப் பல பிரபலங்கள் கடந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர்களும் அம்பானி பத்திரிகை வைத்த நிலையில் அவர்களது தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணம் மோடியை பின் இருந்து இயக்குவது அம்பானி- அதானி என்ற இரு தொழிலதிபர்களே என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருவதே ஆகும்.

 

இந்தநிலையில்தான், நேற்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பாஜக எம்.பி நிஷாந்த் துபே, அம்பானி வீட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார் என்று தெரிவித்தது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பட்ஜெட் மீது அவர் உரையாற்றும்போது , அம்பானி வீட்டு விழாவில் யார் தான் கலந்துகொள்ளவில்லை, அனைத்து அரசியல்வாதிகளையும் அங்கு பார்க்க முடிந்தது. மும்பையில் உள்ள அம்பானியின் வீட்டில் வைத்து நடந்த இரவு விருந்தில் தனது குழந்தைகளுடன் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். ஆனாலும் அம்பானியை அவையில் காங்கிரஸ் தாக்கிப் பேசுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இதனை மறுத்து காங்கிரஸ் தரப்பு எம்.பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், பிரியங்கா அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றும் அந்த சமயத்தில் அவர் நாட்டிலேயே இல்லை என்றும் காங்கிரஸ் விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளது என்றும் அவரை இயக்கும் 6 பேரில் அம்பானியும் ஒருவர் என்று தெரிவித்தார். மேலும், அம்பானி A 1[அக்யூஸ்ட் நம்பர் 1] அதானி A 2[அக்யூஸ்ட் நம்பர் 2] என்று அவர்களின் படத்தைக் காட்டி மக்களவையில் கடுமையாக தாக்கிப் பேசியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ராகுல் காந்தியை ஜாதி தெரியாதவர்கள் என்று கூறியது சர்ச்சையான நிலையில் அதுகுறித்து அவையில் பேசிய நிஷிகாந்த் தூபே, ராகுல் ஒரு துறவி, துறவிகளுக்கு ஜாதி கிடையாதுதான், எனவே அனுராக் பேசியது தவறுதான் என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News