பாலியல் புகார்: இயக்குனர் ரஞ்சித்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
- ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் முன்ஜாமீன் மனு தாக்கல்.
- வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் மலையாள திரையுலகை சேர்ந்த பிரபல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து வருகின்றனர்.
ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு கோர்ட்டுகளில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.
பிரபல மலையாள இயக்குனரான ரஞ்சித் மீது பெங்காலி நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். 2009-ம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்க அழைத்து பாலியல் நோக்கத்துடன் தொட்டு தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தாக இயக்குனர் ரஞ்சித் மீது அந்த நடிகை குற்றம் சாட்டியிருந்தார்.
அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதையடுத்து அந்த வழக்கில் இருந்து தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் ரஞ்சித் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இயக்குனர் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு ஜாமீனில் விடக்கூடிய தாகவும், அது குறித்து போலீசார் ஆலோசித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்தின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.