சரத் பவார் கட்சி காங்கிரஸ் உடன் இணைகிறதா?: பரபரப்பு தகவலை வெளியிட்ட அஜித் பவார் கட்சி தலைவர்
- ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சி.
- பா.ஜனதாவை மகிழ்விப்பதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்- சரத் பவார் கட்சி
சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.-க்கள் பிரித்துக் கொண்டு சென்றார். இவர் தலைமையிலான அணிதான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனால் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்த்ரா பவார்) என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் "சரத் பவாரின் கட்சியை சேர்ந்த ஐந்து முதல் ஆறு எம்.எல்.ஏ.-க்கள் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் சரத் பவார் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க விரும்புகின்றனர்" என அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் தத்காரே தெரிவித்துள்ளார்.
இதற்கு சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைடே கிராஸ்டோ பதில் கூறுகையில் "மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களவை தேர்தலில் அவருடைய கட்சி ஒரு இடத்தைக் கூட பிடிக்காது என்பது தத்காரேவுக்கு தெரியும். பா.ஜனதாவை மகிழ்விப்பதற்காக இது போன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார்" என்றார்.
மக்களவை தேர்தலில் சரத்பவார் கட்சி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி இணைந்து போட்டியிடுகின்றன. மறுபக்கம் பா.ஜனதா, அஜித் பவார் கட்சி, ஏக் நாத் ஷிண்டே கட்சி இணைந்து போட்டியிடுகின்றன.
மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை நிர்ணியக்கும் முக்கிய மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்வது குறிப்பிடத்தக்கது.